தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் அரசின் வழிகாட்டுதலை முழுமையாகக் கடைப்பிடிப்பது தொடர்பாக உணவகங்கள், ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் நிறுவனங்கள், அழகு நிலையங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கரோனா வைரஸ் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் கீழ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதல்கள் அறிவுரைகளை அனைத்து உணவகங்களும், ஆன்லைன் உணவு வழங்கும் நிறுவனங்களும், அழகு நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பது குறித்து இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆணையர் பிரகாஷ் உரிமையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அதன் விவரம் வருமாறு:
• உணவகங்கள் மற்றும் அழகு நிலையங்கள் முகப்பு வாசலில் கண்டிப்பாக கை கழுவுவதற்கு ஏதுவாக கிருமிநாசினி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
• வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகளில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் ஐந்து வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் அனுமதிக்க வேண்டும்.
- அரசின் தளர்வு நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் உணவகங்கள், அழகு நிலையங்களில் அதற்கான அபராத தொகை வசூலிக்கப்படும்.
• கரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தவும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அனைத்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.