தூத்துக்குடி மாவட்டத்தில், அதிகரித்துவரும் குற்றச் சம்பவங்களை குறைக்கும் நோக்கமாக மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் கஞ்சா, கடத்தல், திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதிலும் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், மேலும் ஒருபடியாக மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மக்கள் நடமாட்டம் மற்றும் குற்ற சம்பவங்களில் பின்னணிகளை ஆராயும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஆழ்வார் திருநகர், திருச்செந்தூர் உள்பட பல்வேறு இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மையம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகரின் முக்கிய இடங்களில் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. தூத்துக்குடி தென்பாக்கம் காவல் நிலையத்தில் இன்று இது செயல்பாட்டுக்கு வந்தது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கலந்துகொண்டு கண்காணிப்பு மையத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 300 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் 47 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு 69 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 67 கிலோ கஞ்சா கைப்பற்றபபட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் மட்டும் 2 பேர் குண்டாஸ் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்" என்றார்.