திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல்வேறு மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வசிக்கும் கிராம மக்களுக்கு விவசாயமே பிரதானத் தொழிலாக இருந்து வருகிறது. இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் பருவநிலைக்கு ஏற்ப காய்கறிகள், பழ வகைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
கடந்த மாதம் பீன்ஸ், அவரை, பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது கேரட் விளைச்சல் தொடங்கியுள்ளது. தற்போது பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, மன்னவனூர், பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு மலைக் கிராமங்களில் கேரட் விளைச்சல் இருந்தும், தகுந்த விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "தற்போது கேரட் கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.20 மட்டுமே விலை போகிறது. ஊரடங்கின் காரணமாக கேரட்களை வெளி மாநிலங்கள், வெளி ஊர்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை.
இதனால் செலவழித்த பணத்தைக்கூட எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தனர்.