ஊரடங்கின் காரணமாக கல்வி நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் இணைய வழி பயிற்றுவித்தலை ஊக்குவித்து வருகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உத்தரவினை ஏற்று ஆகஸ்ட்டு 3ஆம் தேதி முதல் இணையவழி வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என தனது கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது.
அதன்படி கடந்த ஐந்து நாள்களும் திட்டமிட்டு மாணவர்கள் அனைவரையும் வாட்ஸ்அப் வழியாக ஒருங்கிணைத்து மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி தமிழ்த்துறையின் இணையவழி வகுப்புகள் இன்று (ஆகஸ்ட் 5) காலை 9.00 மணியளவில் தொடங்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் முனைவர் பா.ஜார்ஜ் ஆலோசனைப்படி தமிழ்த்துறை தலைவர் முனைவர் அ.சாந்தி முன்னெடுப்பில் இன்றைய வகுப்புகள் நடைபெற்றன. இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு பேராசியர்கள் பழனிகுமார், ஹேமலதா, ஹரிக்கிருஷ்ணன், பழனிசாமி ஆகியோர் வகுப்புகளை நடத்தினர்.
பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் பயிலும் தமிழ்த்துறையில் இன்றைய நிகழ்வில் ஒவ்வொரு வகுப்பிலும் 85 விழுக்காடு மாணவர்கள் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.
எந்த வகையில் கல்வியைக் கற்பித்தாலும் அதனைக் கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன் பேராசிரியர்களும், மாணவர்களும் இருக்கின்றனர் என்பதற்கு இன்றைய காணொலி வழி இணைய வகுப்புகள் சான்றாக திகழ்கின்றன என பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.