நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை பல தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது பொதுமக்களிடம் காவல் துறையினர் கொடூரத் தன்மையுடன் நடந்துகொள்வதாகப் புகார் எழுந்தது.
இதன் உச்சகட்டமாக சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளவாசிகளும் காவல் துறையினரைக் கண்டித்துப் பதிவிட்டுவருகின்றனர். அதன் எதிரொலியாக திருச்சி சரக காவல் துறைக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் அரியலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பொதுமக்களிடம் அத்துமீறிய 80 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். மேலும் அந்தக் காவலர்கள் அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு (Cognitive behavioural therapy) உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவித்துள்ளார். இச்சிகிச்சைக்குப் பிறகே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.