கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் தைவான் நாட்டின் விஸ்ட்ரான் (Wistron) கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆப்பிள் ஐபோன், லெனோவா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் பல்வேறு சாதனங்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்நிறுவனம் பல மாதங்களாக ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ஊழியர்கள் கடந்த சனிக்கிழமை (டிச.12) இரவு தொழிற்சாலையை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த தொழிற்சாலை இயந்திரங்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை தாக்கி தேசப்படுத்தினர்.
இந்நிலையில், இத்தாக்குதல் குறித்து முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஸ்ட்ரான் நிறுவனம் சார்பில் வேமகல் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. அதில், "அலுவலக உபகரணங்கள், மொபைல் போன்கள், உற்பத்தி இயந்திரங்கள் என ரூ.412.5 கோடி மதிப்பிலான உபகரணங்கள் இந்த வன்முறையில் தேசமடைந்துள்ளன.
அதேபோல ரூ.10 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகள், ரூ.60 லட்சம் மதிப்பிலான கார்கள் - கோல்ஃப் வண்டிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரூ.1.5 கோடி மதிப்பிலான மற்ற சாதனங்கள் சேதமடைந்தும் காணாமல் போயுள்ளன.
தொழிற்சாலையில் பணிபுரியும் 5,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் 2,000 அடையாளம் தெரியாத நபர்களுமே இந்தத் தாக்குதலுக்கு காரணம்" என்று கூறப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் இதுவரை 149 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள கர்நாடக அரசு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
இதையும் படிங்க: அதிரடி காட்டும் பர்கர் கிங் - முதல் நாளே இரட்டிப்பான பங்குகள்