மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆளுநராக ஜெகதீப் தன்கர் இருக்கிறார். அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவருவதாகக் கூறப்படும் நிலையில், மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை நேற்று (பிப்ரவரி 12) முதல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டம் 174ஆவது பிரிவைப் பயன்படுத்தி சட்டப்பேரவையை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கு வங்க சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும்விதமாக இன்று (பிப்ரவரி 13) ட்விட்டர் பதிவு செய்திருந்தார். அதில், "மேற்கு வங்க சட்டப்பேரவையை ஆளுநர் ஒத்திவைத்த செயல், விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது.
அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்த மாநிலத்தின் தலைவர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில்தான் ஜனநாயகத்தின் அழகு உள்ளது" என்று பதிவிட்டிருந்தார்.
மனத்தைப் புண்படுத்தும் வகையில் கருத்து பதிவு
இதனிடையே ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு மறுப்புத் தெரிவித்து ஜெகதீப் தன்கர் விளக்கம் அளித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில், "மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதன் பேரிலேயே சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
உண்மையை உறுதிசெய்து கொள்ளாமல் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் மனத்தைப் புண்படுத்தும் வகையில் உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே ஆண்டில் வரலாற்று உச்சம்: 45% அதிகரித்த இந்திய-அமெரிக்க வர்த்தகம்!