வைஷாலி: பீகார் மாநிலம் வைஷாலி அருகே உள்ள மணி பகுர்ஹார் பகுதியை சேர்ந்தவர் நரேஷ் பாகத். இவரது மனைவி ரிங்கு தேவி. தம்பதியருக்கு 18 மற்றும் 16 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தான் இளம்பெண்கள் இருவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
நரேஷ் பாகத்தின் இரு மகள்களும் கொலை செய்யப்பட்டதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சடலங்களை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், நரேஷ் பாகத் கொல்கத்தாவில் வேலை செய்து வருகிறார். ரிங்கு தேவியுடன் அவரது இரு மகள்களும் வசித்து வந்துள்ளனர். இருவரும் மாற்று சமூக இளைஞர்களை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இரண்டு பேரும் காதலர்களுடன் வெளியே சுற்றியுள்ளனர்.
இந்நிலையில் கொல்கத்தாவில் இருந்து வீட்டுக்கு வந்த நரேஷ், இதுதொடர்பாக மகள்களை கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இளம்பெண்கள் இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, ரிங்கு தேவியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகள்களை தாம் தான் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனினும், நரேஷ் தலைமறைவாகி உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர். கணவரை காப்பாற்றுவதற்காக கொலைப்பழியை ரிங்கு தேவி ஏற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நரேஷ் கைது செய்யப்பட்டால் மட்டுமே உண்மை தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.