தெலங்கானா ராஜ்பவனில் நேற்று (மே 22) மாலை காணொலி காட்சியின் வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் தயாரிக்கும் முயற்சியிலும்; மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 2டிஜி மருந்தையும் தயாரிக்கும் நிறுவனமான டாக்டர் ரெட்டி லேபாரட்டரிஸ் நிறுவனத்துடன் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துரையாடினார்.
முதலில், கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 2 டிஜி மருந்து தயாரிப்பதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டார். இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி தெலங்கானாவில் மூன்று இடங்களில் தயாரிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொண்ட தமிழிசை, அதற்கான பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
அத்துடன், அதே மாதிரியான தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிலையங்களை புதுச்சேரி மாநிலத்திற்கு உள்ளும் ஆரம்பித்தால் அது புதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது மட்டுமல்லாமல், கரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் புதுச்சேரி, தமிழ்நாடு மக்களுக்கு பயனளிப்பதாகவும் இருக்கும் என்று கோரிக்கையும் வைத்தார்.
அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக டாக்டர் ரெட்டி குழுமத்தினர் உறுதி அளித்திருக்கின்றனர்.
சாத்தியக்கூறுகள் தென்பட்டால் புதுச்சேரி முதலமைச்சரோடு கலந்து ஆலோசித்து அதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வளைகாப்பில் பரவிய கரோனா - கர்ப்பிணி மருத்துவர் பலி