டெல்லி: கரோனா தொற்றால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை பெரிதும் குறைக்கப்பட்டன. தற்போது, கரோனா தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் பழைய ரயில் சேவைகளை அளிக்கும் வகையில், ரயில்வே பயணிகள் முன்பதிவு முறையின் (Passenger Reservation System) சில மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து தென்மேற்கு ரயில்வே செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது.
முன்பதிவுகளை முறைப்படுத்த...
அதில், "கரோனா தொற்று ஊரடங்கிற்கு ரயில் சேவைகளை மீண்டும் அளிக்கும் வகையிலும், பயணிகள் சேவையை எளிமைப்படுத்தும் விதமாகவும் ரயில்வே பயணிகள் முன்பதிவு அமைப்பில் அடுத்த ஏழு நாள்களுக்கு, தினமும் குறைவான வணிகநேரமாக கருதப்படும் ஆறு மணிநேரத்திற்கு முன்பதிவு சேவைகளை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
பயணச்சீட்டு முன்பதிவுகளை முறைப்படுத்த இந்தச் செயல்பாட்டினை மிகுந்த கவனத்துடன் பல்வேறு படிநிலைகளின் அடிப்படையில் திட்டமிட்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளது.
பிற சேவைகள் இயங்கும்
மேலும், நவம்பர் 14,15 நள்ளிரவு முதல் நவம்பர் 20,21 நள்ளிரவு வரை சேவைகள் ரத்துசெய்யப்படும் என்றும் இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரை பயணச்சீட்டு முன்பதிவுகள், முன்பதிவு செய்ததை பின்தொடர்தல், முன்பதிவு ரத்துசெய்தல், முன்பதிவு தொடர்பான விசாரணை போன்ற சேவைகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
இந்தச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டாலும் பயணிகளுக்கான இருக்கைகள் அறிவிப்பு முன்கூட்டியே (Chart Preparation) அறிவிக்கப்படும் என்றும் முன்பதிவு சேவைகளை தவிர்த்த பிற சேவைகளில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது. ரயில்வே நிர்வாகத்தினரின் இந்த செயல்பாட்டுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது.
இதையும் படிங்க: குஜராத்தில் அசைவத்திற்குத் தடை: எச்சரிக்கும் காங்கிரஸ்