புதுச்சேரி: புதுச்சேரி மக்கள் இயக்கம் சார்பில் புதுச்சேரிக்கு மாநில தகுதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாநாடு கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் உள்பட பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து உரையாற்றினர்.
இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மாநில அந்தஸ்து பெற்றால் மட்டுமே புதுச்சேரி முழு வளர்ச்சியை பெறமுடியும். புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்தை தருமாறு நாங்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தோம். ஏனென்றால் அப்போதுதான் 90 சதவீதம் நிதி கிடைக்கும்.
தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்டு அரசை முடக்கி உள்ளனர்.
எனவே முழு அதிகாரமும் பெற்ற மாநிலமாக இருந்தால் மட்டுமே, மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும். அதனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுச்சேரில் கள்ளச்சாராய மூலப்பொருள்கள் பறிமுதல்!