திருவனந்தபுரம்: பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உருவாக்கியுள்ள, நீல பொருளாதார கடல் செல்வக் கொள்கை வரைவை(Blue Economy ocean wealth policy draft) எதிர்த்து கேரளாவில் மீனவர்கள் தீவிரமாக போராடத்தொடங்கியுள்ளது. இந்தக் கொள்கை பாரம்பரிய மீனவர்களுக்கு எதிராகவும், பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நீல பொருளாதாரத்தில் மிகவும் ஆபத்தான பரிந்துரைகளை மீனவர் சங்கங்கள், மீனவர் கூட்டமைப்புகள் ஒருமித்த குரலில் சுட்டிக்காட்டி வருகின்றனர். தேசிய மீன்வளக் கொள்கையும் பாரம்பரிய மீனவர்களுக்கு எதிராக இருப்பதாகவும் அவை தெரிவிக்கின்றன.
நீல பொருளாதார கொள்கையின் வரைவு பிப்ரவரி 17ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இதுதொடர்பாக கருத்துகளை மாநில அரசும், சம்பந்தப்பட்ட துறையும் 27ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.
இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள மீனவர்களுக்கு இந்த கொள்கை தீங்குவிளைவிக்கும் எனக்குறிப்பிட்ட மீனவர்கள், இது அந்தந்த மாநிலங்களில் உரிமையையும் பறிப்பதாக தெரிவிக்கின்றனர்.
சாகர் மாலா திட்டத்தின் ஒருபகுதியாக திட்டமிடப்பட்ட மிகப்பெரிய திட்டங்கள், வணிகங்கள் கடலோர மக்களுக்கு பெரும் சவலாக இருக்கும். இந்த திட்டம், இந்தியாவின் கடல் வளத்தை இந்தியா பெரு முதலாளிகள், வெளிநாட்டு சக்திகள் ஏகபோகமாக அனுபவிக்க வழிவகை செய்யும்.மேலும், மீனா குமாரி அறிக்கைக்கு எதிராக கடுமையான போராட்டங்களைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கப்பல்களும் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் திரும்பி வரக்கூடும் என மீனவர்கள் அஞ்சுகின்றனர்.
பொதுவாக, மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு 60 முதல் 90 நாட்கள் வரை கருத்து தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்படும். ஆனால், இந்த நீல பொருளாதார கொள்கை விஷயத்தில், குறைவான காலமே கருத்து தெரிவிக்க வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீனாவை கட்டுப்படுத்த மேலும் கூர்தீட்டுவோம் மேன்மையான ராஜதந்திரங்களை