தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தீவிரம் அடைந்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்கு தேசிய ஆக்ஸிஜன் திட்டத்தின் கீழ் உடனடியாக கூடுதல் ஆக்ஸிஜனை வழங்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இன்று(மே.8) பிரதமர் மோடியுடன், முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்ஸிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாகப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, கரோனா தொடர்பாக ஆலோசனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வடமாவட்டங்களில் பலத்தை நிரூபித்த திமுக... சாத்தியமானது எப்படி?