வாரணாசி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு இன்று (டிசம்பர் 13) செல்கிறார். அங்கு உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ரூ. 339 கோடி செலவில் புதிய வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 2019 மார்ச் 8ஆம் தேதி பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், கோயிலின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்நிகழ்வில், 12 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இனி காசி விஸ்வநாதர் கோயில், காசி விஸ்வநாதர் தாம் என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அடையாளம்
கோயிலின் புதிய வளாகத்தில் சுற்றுலாப் பயணிகள் வசதி மையம், உணவு விடுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த வளாகத்தை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காசி விஸ்வநாதர் தாம் வாரணாசிக்கு உலக அடையாளத்தை பெற்றுத்தரும் என்றார்.
மேலும், கங்கை ஆற்றங்கரையையும், காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தையும் இணைக்கும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் பல உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.