சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா மாவட்டத்தில் உள்ள பாங் அணைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருவது வழக்கம். இந்த வருகையால் பாங் அணை பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
![பாங் அணை சரணாலயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17668507_thumbnaf.jpeg)
மத்திய ஆசியா, சைபீரியா, சீனா மற்றும் மங்கோலியாவில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் கடும் பனிக்காலத்தை தவிர்ப்பதற்காக இந்த பறவைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை கடந்து இமாச்சலப் பிரதேசம் வருகின்றன. அதன்பின் 2 மாதங்கள் கழித்து கோடை கால தொடக்கத்தில் மீண்டும் திரும்புகின்றன.
![பாங் அணை சரணாலயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17668507_thumbna.jpeg)
அந்த வகையில், 108 வகையான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 1,10,309 பறவைகள் வந்து சென்றிருந்தன. ஆனால், இந்தாண்டு 1,17,022 பறவைகள் வந்துள்ளன. இந்த கணக்கெடுப்பு பணி ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பாங் அணை பறவைகள் சரணாலயத்தின் தலைமை வனப் பாதுகாவலர் உபாசனா பாட்டியல் கூறுகையில், இந்த சரணாலயத்தின் முழுப் பகுதியும் 25 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன. இந்த பணியின் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும்படி இருந்தது.
![பாங் அணை சரணாலயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17668507_thumbnafd11.jpg)
ஏனென்றால், கடந்தாண்டை விட 7,000 பறவைகள் கூடுதலாக வருகை புரிந்துள்ளன. இதனால் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக, ரஷ்யாவில் மட்டுமே காணப்படும் நார்த்தேன் பின்டெய்ல் என அழைக்கப்படும் நீள வால் வாத்துகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நீள வால் வாத்துகளின் எண்ணிக்கை கடந்தாண்டு 4,665ஆக இருந்த நிலையில் இந்தாண்டு 15,784ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.
![பாங் அணை சரணாலயம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17668507_th.jpg)
இதையும் படிங்க: பறவைகள் கணக்கெடுப்பில் களமிறங்கிய கல்லூரி மாணவிகள்