டெல்லியின் சாகேத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 32 வயது கார் உரிமையாளர் செங்கற்களால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சாகேத் போலீசார் தரப்பில், "ஜூலை 16ஆம் தேதி அதிகாலை 2.53 மணிக்கு சாகேத் மெட்ரோ ரயில் நிலையத்தின் 2ஆவது நுழைவு வாயில் அருகே தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஜூலை 17ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தது டெல்லியை சேர்ந்த ரோஹித் (32) என்பதும், சம்பவ நாளன்று கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 5 பேர் கொண்ட கும்பல் அவரை செங்கற்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக 302 (கொலை), 308 (கொலை முயற்சி) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதனிடையே கும்பலை சேர்ந்த பிரியன்ஷு (22) என்பவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள நான்கு பேரை தேடி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அருணாச்சல பிரதேசத்தில் 18 தொழிலாளர்கள் மாயம்