ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் தனது காதலியைப்போதை மருந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெய்ப்பூரைச்சேர்ந்த சமீர் என்னும் இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் தெரிவிக்கையில், இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி சமீர் இளம்பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துள்ளார்.
பின்னர், பெண்ணிற்கு போதைப்பொருள் கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்பின் அந்த பெண் மயங்கியதால் பயந்துபோன சமீர், சிறுமியின் சகோதரியை ஹோட்டலுக்கு வரவழைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை சகோதரியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார் எனத்தெரிவித்துள்ளனர்.
இதன் பின் அந்தப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது, மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் தப்பி செல்ல முயன்ற சமீரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ஜிஆர்பி மற்றும் ஆர்பிஎஃப் உதவியுடன் காவல் துறையினர் கைது செய்து ஜோத்பூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சமீர் உண்மையை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோவில் கைது