திருவனந்தபுரம் (கேரளா): கேரளாவின் பழம்பெரும் திரைப்பட இயக்குநரான கே.ஜி. ஜார்ஜ், தனது 77-வது வயதில் கொச்சியில் உள்ள காக்கநாட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் இன்று (செப்.24) மரணமடைந்தார். இவர் மலையாளத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். புதுமையான கதையம்சம் கொண்ட இவரது படங்கள் ரசிகர்களுக்கு பிற படங்களில் இருந்து புதுமையான திரை அனுபவத்தை அளித்தது. கே.ஜி.ஜார்ஜின், ‘பஞ்சவடி பழம்’ திரைப்படம் அவரது இயக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கே.ஜி.ஜார்ஜ் கேரளாவின் பத்தினம்திட்டா என்னும் இடத்தில் பிறந்தவர். இவர் 1975-ஆம் ஆண்டு வெளியான ஸ்வப்னதானம் என்னும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் சிறந்த மலையாள படத்திற்கான விருதைப் பெற்றது. பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இவர், 9 முறை கேரள அரசின் விருதினையும் வென்றுள்ளார்.
இதையும் படிங்க: துல்கர் - வெங்கி அட்லூரி இணையும் "லக்கி பாஸ்கர்" பூஜையுடன் தொடங்கியது!
சில ஆண்டுகளுக்கு முன்னர் பக்கவாத பாதிப்பால் முடங்கிய கே.ஜி.ஜார்ஜ், அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். காக்கநாடு முதியோர் இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த அவர் இன்று (செப்.24) உயிரிழந்தார். ஜார்ஜ் ஏறக்குறைய 20 திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், கமர்ஷியல் மற்றும் கலைத் திரைப்படங்களின் கருத்தை உடைத்து, தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் மக்களுக்கு ஒரு செய்தியைக் கொடுத்த இயக்குநராக இருந்தார்.
உண்மையைப் பேச தயங்காத இயக்குநராக திகந்த இவர் பாலியல், அரசியல், ஊழல், குற்றம் உள்ளிட்ட விஷயங்களை தனது கதைகளின் மூலம் தொட்டு, மலையாளத் திரையுலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவராக கருதப்படுகிறார்.
இதையும் படிங்க: சிவாஜி பட ஸ்ரேயாவாக மாறிய 10 வயது சிறுவன்.. ஒரே நாளில் சூப்பர் ஹீரோவானது எப்படி?