மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நந்தேடில் உள்ள ஒரு சியுடிஐஎஸ் என்ற பயோடெக் நிறுவனம், சீரம் நிறுவனத்திற்கு எதிராக புனேவில் உள்ள ஒரு வணிக நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், கடந்த ஏப்ரல் மாதத்தில் தங்கள் தயாரிப்புகளுக்கான வர்த்தக முத்திரைப் பதிவினை (ட்ரேட் மார்க்) 'கோவிஷீல்ட்' என்ற பெயரில் வெளியிட விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு மே 30ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 'கோவிஷீல்ட்' என்ற வர்த்தக முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட பொருள்களின் வருவாய் சுமார் ரூ.16 லட்சம்.
'கோவிஷீல்டு' என்ற பெயரை தங்கள் நிறுவனம் பயன்படுத்தி வரும் வேளையில், சீரம் நிறுவனம் 'கோவிஷீல்டு' என்ற பெயருக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் விண்ணப்பித்துள்ளது. இதையடுத்து, இந்த பெயரைப் சீரம் நிறுவனம் பயன்படுத்த தடை விதிக்கவேண்டும் என வலியுறுத்தி, நந்தேட் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், உள்ளூர் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சீரம் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்ததால், தற்போது வர்த்தக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், இந்தப் பெயர் குழப்பத்தால் பலர் தங்களுடைய மருந்துப் பொருள்களை வாங்க மறுத்ததால், ஏராளமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான இழப்பீடும் தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்த வழக்கு வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை!