ஜி-20 நாடுகள் என்பது உலகின் பொருளாதாரத்தில் 90 விழுக்காட்டைக் கொண்டுள்ள 20 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு. 80 விழுக்காடு உலக வர்த்தகம், மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகை என உலகின் பாதியைக் கொண்டிருக்கும் நாடுகளாகும்.
இந்த ஜி-20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில், சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அகிஸ் தலைமையேற்று நடத்தும் 15ஆவது ஜி-20 மாநாடு இந்தாண்டு வெற்றிகரமாக காணொலி வாயிலாக நடைபெற்றது. பிரதமர் மோடி உள்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டின் ஜி20 மாநாடு இந்தியாவில் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஜி 20 ரியாத் உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெற்றிகரமாக ரியாத் உச்சி மாநாட்டை நடத்தியதற்காகவும், ஜி 20 செயல்முறைக்கு அதன் பங்களிப்புக்காகவும் நாங்கள் சவுதி அரேபியாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
எங்கள் அடுத்த கூட்டங்களை 2021இல் இத்தாலி, 2022இல் இந்தோனேசியா, 2023இல் இந்தியா, 2024இல் பிரேசில் ஆகியவற்றில் நடத்தி திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
முன்னதாக, 2022இல் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தும் எனப் பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜி20 மாநாடு 2023இல் இந்தியாவில் நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.