டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மல்லிகார்ஜுன கார்கே தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கார்கேவை எதிர்த்துப் போட்டியிட்ட எம்பி சசி தரூர் மிகவும் குறைவான வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சசி தரூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வெற்றி பெற்ற கார்கேவுக்கு எனது வாழ்த்துகள். கட்சி நிர்வாகிகளின் இந்த முடிவை நான் பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். தலைவரை தேர்வு செய்யும் உரிமையை நிர்வாகிகளுக்கு வழங்கிய காங்கிரஸ் கட்சியில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பது எனது பாக்கியம்.
புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, போதிய அனுபவம் கொண்டவர். அவரது வழிகாட்டுதலின் மூலம் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என நம்புகிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கு கால் நூற்றாண்டு காலம் தலைமை வகித்ததற்காகவும், எங்களின் மிக முக்கியமான தருணங்களில் தூணாக இருந்ததற்காகவும், சோனியா காந்திக்கு கட்சி கடன்பட்டுள்ளது. தலைவர் தேர்தலை நடத்த வேண்டும் என்ற முடிவு, சோனியா காந்தியின் புத்திசாலித்தனம் மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு சான்று.
இந்த தேர்தலை சுதந்திரமாகவும், நடுநிலையாகவும் நடத்த ஆதரவாக இருந்த ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்திக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நேரு-காந்தி குடும்பம், காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, அந்த இடம் எப்போதும் இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பட்டியலின முகமான கார்கேவுக்கு தாமதமாக அங்கீகாரம் தந்த காங்கிரஸ்!