ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் பகுதியை பூர்விகமாக கொண்டவர்கள் ரவீந்திர ஜனா, கபீர் ஜனா தம்பதியினர். இவர்கள் புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கபீர் ஜனாவை அவர்களின் சொந்த ஊருக்கு டிசம்பர் 9ஆம் தேதி புவனேஸ்வர் செல்லும் ரயிலில் கணவர் வழி அனுப்பி வைத்துள்ளார். மறுநாள் ஒடிசா சென்ற ரயிலில் கபீர் வந்து சேரவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையத்தில் கணவர் ரவீந்திர ஜனா தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார். பின்னர் தானே வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ரயில் நிலையமாக மனைவியை தேடிப் புறப்பட்டார்.
இதனிடையே ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் பகுதியில் கபீரின் செல்போன் சிக்னல் நிறுத்தப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்ததும் அங்கு சென்று ரயில்வே அலுவலர்களிடம் விசாரித்ததில், அவர் மயக்கம் அடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.
பின்னர் கபீரிடம் நடத்திய விசாரணையில் பயணி ஒருவர் கட்டாயப்படுத்தி வாழைப்பழத்தை கொடுத்ததும் அதை சாப்பிட்டதால் மயக்கடைந்தார். இதையடுத்து அவர் அணிந்திருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து கணவர் ரவீந்திர ஜனா பாலேஸ்வர் பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.