ஹைதராபாத்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் தான் தவாங். 2172 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தில் மக்கள் தொகையும் மிகவும் குறைவு. தவாங், லும்லா, ஜங், கிட்பி, ஜெமிதங், முக்டோ, திங்பு, லெள, பொங்கர், துடுங்கர் ஆகிய பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
தவாங் செக்டார் (Tawang sector)பகுதியில் கடந்த 9-ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்தது. கற்கள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு 300க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் இந்திய வீரர்கள் மீது கொடூரமாக முறையில் தாக்குதல் நடத்தியபோது இந்திய வீரர்கள் சீன வீரர்களுக்கு பதிலடி கொடுத்து ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர். இது தொடர்பான வீடியே வெளியாகி தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய எல்லை மோதல்கள் அரங்கேறி வருகின்றன. தவாங் செக்டாரில் தான் 1962 இந்தியா - சீனா போர் முதலில் தொடங்கியது. போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட கடைசி இடமும் அதுதான். இங்குள்ள பழங்குடியினர், குறிப்பாக மோன்பாஸ் இன மக்கள் தனித்துவமான அடையாளத்துடன் திபெத்திய பௌத்த மதத்தை பின்பற்றுகின்றனர். பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு (1962ல்) அந்நிய ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்ந்த ஒரே இந்தியர்கள் தவாங் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
![தவாங்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17260748_ta.jpg)
60 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 1962 இல், கடைசி சீன வீரர்கள் தவாங்கை கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆக்கிரமித்திருந்தனர். திபெத்தியர்கள் மீது காட்டிய அதே கோபத்தை சீனர்கள் தங்கள் மீது காட்டிவிடுவார்களோ என்ற அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேற அப்பகுதி மக்கள் முயன்றனர். ஆனால் சீன வீரர்கள் மோன்பா கிராமங்களில் முகாம்கள் அமைத்ததால் வெளியேற முடியாதவர்கள் காடு, மலைப்பகுதியில் அச்சத்துடன் நாட்களைக் கழித்தனர். 60 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதே உணர்வை ஏற்படுத்த சீனா முயன்றுள்ளது.
தவாங் மாவட்டத்தில் மோதல் நடந்த யாங்சே என்ற பகுதி பும்லா - துலுங்லா ஆகிய இரண்டு உயரமான மலைப்பாதைகளுக்கு இடையே உள்ளது. 20 அக்டோபர் 1975-ஆம் ஆண்டு இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதல் நடந்த 8 நாட்களுக்கு பிறகு 4 இந்திய வீரர்கள் உடல்கள் சீன அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது.
தவாங் பள்ளத்தாக்கு திபெத்துக்கும், பூடானுக்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளது. 13,700 அடி உயரத்தில் அமைந்துள்ள சேலா கணவாய் வழியாக நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு தலாய் லாமா, சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத்தை விட்டு வெளியேறி, தவாங் பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தார். 1962ல் தவாங் செக்டார் வழியாக அருணாச்சலப் பிரதேசத்தை சீனர்கள் ஆக்கிரமித்தனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் இன்றும் இது மிகப்பெரிய சர்ச்சையாகவே உள்ளது.
2003 மற்றும் 2014 இடையே 10 ஆண்டுகளில் இந்தியாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தைகளுக்கு சீன மூத்த தூதர் மற்றும் சீனாவின் சிறப்புப் பிரதிநிதியான டாய் பிங்குவோ 2017-ல் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்வில் "தவாங் உட்பட சீனா - இந்திய எல்லையின் கிழக்குப் பகுதியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதி, கலாச்சார பின்னணி மற்றும் நிர்வாக அதிகார வரம்பு அடிப்படையில் சீனாவின் திபெத்திலிருந்து பிரிக்க முடியாதது" என்று கருத்து கூறியிருந்தார். இப்படி சீனாவுக்கு எப்போதும் ஒரு பார்வையுடனே உள்ள தவாங் பற்றிய வரலாற்றை ஒருமுறை புரட்டிப்பார்க்க வேண்டியுள்ளது.
![இந்திய வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேச மாநிலம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17260748_125.jpg)
1914-ம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தின் மெக்மேஹன் கோடு(எல்லை) உருவாக்கப்பட்டது. சீனாவின் அச்சுறுத்தல்களை ஈடுகட்டும் வகையில் தவாங் கட்டுப்பாடு பிரிட்டிஷ் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. 1920-ல் இருந்து திபெத்தில் சீனா வலுவாகவும், ஆர்வமாகவும் இருந்ததால், தவாங் மீதான இந்திய கோரிக்கை பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.