பாட்னா: பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள கஜிபூரைச் சேர்ந்தவர் பாரத். இவர், முட்டை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில்தான் தனது இரண்டரை மாத பெண் குழந்தையை கொலை செய்துள்ளார் பாரத்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:
கடந்த 26ம் தேதி வீட்டில் இருந்த பாரத்தின் இரண்டரை மாத பெண் குழந்தை காணாமல் போனது. இதையறிந்த அவரது மனைவி, குழந்தையை காணவில்லை என பாரத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான குழந்தையை தேடியுள்ளனர்.
விசாரணையின் போது பாரத் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிரமாக விசாரித்ததில், குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் அவர் அளித்த தகவலின் அடிப்படையில், வீட்டின் சமையலறையில் இருந்த எண்ணெய் டப்பாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். பின்னர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் குழந்தை பிறந்த போதே இதய பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பாரத் தனது மனைவியின் நகைகளை விற்று குழந்தைக்கு மருத்துவம் பார்த்துள்ளார். எனினும், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவரது தொழிலும் முடங்கியதால், குடும்பம் நடத்தவே மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.
வேறு வழி தெரியாமல் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். அதன்படி வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன்பிறகு சடலத்தை எண்ணெய் டப்பாவுக்குள் வைத்துள்ளார். குழந்தையை காணவில்லை என மனைவி கூறிய போது, ஒன்றும் தெரியாதது போல் காவல் நிலையத்துக்கு சென்று புகார் தெரிவித்திருக்கிறார். எனினும் போலீசாரின் தீவிர விசாரணையில் அவரது நாடகம் அம்பலமாகியுள்ளது.
இதற்கிடையே, ஏற்கனவே குழந்தையை பாரத் கொலை செய்ய முயன்றதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தையின் மூக்கில் ஃபெவிகாயிலை ஊற்றியுள்ளார். ஆனால் அப்போது குழந்தையை காப்பாற்றப்பட்டது. இந்நிலையில் பாரத்தை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: Karnataka Election: காங்கிரஸூக்கு ஊழல் மட்டுமே சொந்தம் - பிரதமர் மோடி விமர்சனம்