சிக்கமங்களூரு: கர்நாடக மாநிலம், சிக்கமங்களூரு அருகே உள்ள பொம்மனஹள்ளியில் கடந்த 4ஆம் தேதி 55 வயதான பிரமோத் என்பவர் உயிரிழந்துவிட்டார். அன்று முதல் பெங்களூரு மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்ததால், பொம்மனஹள்ளி கிராமமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
அந்த கிராமத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நீர்நிலைகள் நிரம்பியதால் கிராமமே வெள்ளத்தில் தத்தளித்தது. மயானத்திற்குச்செல்லும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், சடலத்தை எடுத்துச் செல்ல முடியாமல் இரண்டு நாட்களாக வீட்டிலேயே வைத்திருந்தனர்.
நேற்று(செப்.6) வெள்ளம் சிறிது வடியத் தொடங்கியதும், புதைக்க குழி தோண்டுவதற்காக ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வந்தனர். அதுவும் சேற்றில் சிக்கிக் கொண்டது. அதனால், சடலத்தை சுமந்து சென்று, மயானத்தின் உயரமான இடத்தில் வைத்து இறுதிச்சடங்கு செய்தனர்.
தங்களது கிராமத்தில் சாலைகள் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் இருப்பதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க: விநாயகர் ஊர்வலம் சென்ற வண்டியில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு