‘தர்ம கார்டியன் - 2022’ என்ற பெயரில் இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவத்தினர், கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை கூட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த பயிற்சி இரு நாட்டு ராணுவத்தினர் இடையே கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடக்கிறது. வெளிநாட்டு ராணுவத்தினருடன் மேற்கொள்ளப்படும் கூட்டு பயிற்சியில் ‘தர்ம கார்டியன்’ கூட்டு பயிற்சி முக்கியமானது.
இதில் இரு நாடுகளும் சந்திக்கும் பாதுகாப்பு சவால்கள் அடங்கியுள்ளன. இந்த கூட்டு பயிற்சி காடுகள் மற்றும் நகர்ப்புற நிலப்பரப்புகளில் நடைபெறுகின்றன. இந்திய ராணுவத்தின் 15வது பட்டாலியன் மராத்தா காலாட்படை மற்றும் ஜப்பான் பாதுகாப்பு படையின் 30வது படைப்பிரிவும் இந்தாண்டு கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்த பயிற்சியில் இருதரப்பின் போர் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படும்.
தர்ம கார்டியன் பயிற்சியில், பங்கேற்க ஜப்பான் படையினர் இன்று பயிற்சி நடைபெறும் இடத்துக்கு வந்தனர். அவர்களுக்கு இந்திய ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 12 நாட்கள் நடைபெறும் கூட்டுப் பயிற்சியில் பயங்கரவாத மறைவிடங்களில் தேடுதல் வேட்டை, போர்களத்தில் முதலுதவி, ஆயுதமில்லா போர் முறை, மிக நெருக்கமாக துப்பாக்கி சண்டை மேற்கொள்ளும் முறை போன்றவற்றில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும். உலகளாவிய தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதில் திறனை அதிகரிப்பது குறித்து இந்த கூட்டுப் பயிற்சியில் கவனம் செலுத்தப்படும்.
‘தர்மா கார்டியன்’ கூட்டு பயிற்சி மூலம் இரு நாட்டு ராணுவ உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும். இதன் மூலம் இந்தியா-ஜப்பான் இடையே இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும்.
இதையும் படிங்க: உக்ரைனில் ரஷ்யா படைகள் தாக்குதல் - போரின் கோர முகம்