சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள சில்கர் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 12 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை வீரா்கள் 5 பேர் உயிரிழந்தனா். அத்துடன் 30 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே, என்கவுன்ட்டரில் ஈடுபட்ட வீரர்கள் 17 பாதுகாப்பு படை வீரர்களை காணவில்லை என்று அம்மாநில காவல் துறையினர் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களை தேடும் பணியின்போது, 17 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி இருவரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
அதன்படி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டரில், "மாவோயிஸ்டுகளை எதிர்த்துப் போராடும்போது பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தது, ஆழ்ந்த வேதனையைத் தருகிறது. துயரமடைந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல். தேசம் உங்களின் வலியைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த தியாகத்தை ஒருபோதும் தேசம் மறக்காது" எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் சண்டையிடும்போது உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்கள் மீது எனது எண்ணங்கள் உள்ளன. துணிச்சலான வீரர்களின் தியாகங்களை ஒருபோதும் மறக்க முடியாது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சுக்மா நக்சல் தாக்குதல்: 22 ராணுவ வீரர்கள் வீர மரணம்!