டூல்கிட் என்பது குறிப்பிட்ட விவகாரத்தின் முழுமையான தகவல்கள் அடங்கிய இணைய ஆவணமாகும். குறிப்பிட்ட விவகாரம் குறித்த தகவல்களை கோப்பாக தயாரித்து மக்களின் ஆதரவை கோருவதுடன் அதனை தீர்ப்பதற்கான வழிகளையும் அளிக்கிறது. ஒருவர் தயாரிக்கும் டூல்கிட்டை மற்றவர் தனக்கு தெரிந்த தகவல்களுடன் மாற்றி அமைக்கவும் இது வழிசெய்கிறது.
சமூகவலைதளங்களில் பகிரப்பட்டுவந்த வேளாண் சட்டங்கள் குறித்த டூல்கிட்டே குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறைக்கு காரணம் என டெல்லி காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இந்த டூல்கிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், பாகிஸ்தான், காலிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை ட்விட்டரிலிருந்து நீக்க அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சுமார் 1,178 கணக்குகளில் பாகிஸ்தான், காலிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகள் பதிவிடப்பட்டதாகவும் அதன் மூலம் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு போராட்டம் தூண்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த உத்தரவை ட்விட்டர் இன்னும் செயல்படுத்தவில்லை.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், "விவசாயிகள் போராட்டம் குறித்த பிரபலங்களின் கருத்துகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்வினையாற்றியதற்கு காரணம் உண்டு. சிறிய அளவிலான புரிதல் கூட இல்லாத விவகாரம் குறித்து பேசியுள்ளனர். டூல்கிட் விவகாரம் குறித்து காவல்துறை விசாரித்துவருகிறது" என்றார்.