டெல்லி: நாடு முழுக்க சிபிஎஸ்இ மாணவர்கள் எதிர்பார்த்த 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியாகின்றன.
கரோனா இரண்டாம் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏனெனில் பல்வேறு மாநிலங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறவில்லை. அஸ்ஸாம், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக குழப்பம் நீடித்தது.
இந்நிலையில் 1,152 மாணவர்களின் கையொப்பத்துடன் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சிபிஎஸ்இ தேர்வில் மதிப்பெண் வழங்குவது, நேரடித் தேர்வு, சிபிஎஸ்இ வாரியத்தில் நிலவும் குறைகளை களைவது குறித்தும் கூறப்பட்டிருந்தது.
இது தவிர பெற்றோர் தரப்பிலும் இவ்விவகாரம் தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனால் சிபிஎஸ்இ முடிவுகள் வெளியாவதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்தன. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ வாரியம் தரப்பில் அதிகாரப்பூர்வமாக, “ஜூலை 31ஆம் தேதி சிபிஎஸ்இ முடிவுகள் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் சிபிஎஸ்இ முடிவுகள் வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி வெளியாகின்றன. தொடர்ந்து இந்த முடிவுகள் சிபிஎஸ்இ வாரியம் அமைத்த குழுவுக்கு பரிந்துரைக்கப்படும்.
சிபிஎஸ்இ விருப்பத் தேர்வு
இந்த மதிப்பெண்களில் மாணவர்களுக்கு திருப்தியில்லையென்றால் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை தேர்வுகளில் கலந்துகொள்ளலாம்.
இதில் மாணவர்கள் தேர்வெழுதி பெறப்படும் மதிப்பெண்கள் இறுதி செய்யப்படும். வியாழக்கிழமை (ஜூன் 24) உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, விருப்பத் தேர்வுகள் மற்றும் மதிப்பெண் வழங்கல் வழிமுறை முடிவுகளை சிபிஎஸ்இ எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை உடனடியாக நடத்த வேண்டும்: ஜெயபிரகாஷ் காந்தி