நிஜாமாபாத்: தெலங்கானா மாநிலம் நிஜமாபாத்தை சேர்ந்த பிரபாகர் என்பவரின் மகள் ரைகலா ரவாலிக்கு இன்று (டிசம்பர் 11) திருமணம் நடைபெற இருந்தது. நண்பகல் 12:15 மணியளவில் முகூர்த்தம் நிலையில், திருமண மண்டபமே விழாக் கோலம் கொண்டு இருந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு சரியாக 2 மணி நேரத்திற்கு முன் மணப்பெண் ரவாலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தற்கொலை இரு வீட்டார் மட்டுமல்லாம் திருமணத்திற்கு வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், ரவாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ரவாலியின் தந்தை பிரபாகர் அளித்த புகாரில், திருமணத்திற்கு முதல் நாள் இரவு மணமகன் சந்தோஷ், தன் மகளை அழைத்து துன்புறுத்தியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அதிலிருந்து தற்போது வரை தங்கள் இருவருக்குள் எந்த சண்டை சச்சரவும் இல்லை என மணமகன் சந்தோஷ் தெரிவித்தார். ரவாலி உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவராத நிலையில் வழக்குபதிந்து அடுத்தக் கட்ட விசாரணையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: மாடலாக முடி வெட்டியதற்கு திட்டிய தந்தை.. மனமுடைந்த சிறுவன் தற்கொலை..