உத்தரப் பிரதேம் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்கதையாகி-வருகின்றன. இந்நிலையில், சம்பல் மாவட்டத்தின் பஹ்ஜோய் நகரில் உள்ள ஒரு வீட்டில் சகோதரிகள் இருவர் தூங்கிக்கொண்டிருந்தனர். அதிகாலைப் பொழுதில் திடீரென அவர்களின் வீட்டிற்குள் காவலர்கள் வேடத்தில் இரண்டு பேர் நுழைந்துள்ளனர்.
சகோதரிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகவும் இது குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் வீட்டிலிருந்த அவர்கள் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வரவேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றனர். இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் செல்லாமல் அருகில் உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கேயே விட்டுச்சென்றனர்.
பின்னர் வீடு திரும்பிய இரு சகோதரிகளும் நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறியுள்ளனர். இது குறித்து பஹ்ஜோய் காவல் நிலையத்திற்குச் சென்று குடும்பத்தினர் விசாரித்தனர். ஆனால், விசாரணைக்காக யாரையும் வீட்டிற்கு அனுப்பவில்லை எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காவலர்கள் வேடமிட்டு சகோதரிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்த 2 இளைஞர்கள் கைது