புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘சமீபத்தில் அமைச்சர்கள் மாறுவேடம் போட்டு மோட்டார் சைக்கிள்களில் யாருக்கும் தெரியாமல் தன்னை சந்தித்து செல்கின்றனர் என்று கிரண் பேடி தெரிவித்துள்ளார். இதுபோன்ற தேவையில்லாத குற்றச்சாட்டை கூறுவது தவறு. அவ்வாறு எந்த அமைச்சர் வந்து பார்த்தார்கள் என்பதை கிரண்பேடி தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும் அமைச்சர்கள் யாரும் எப்போதும் கிரண்பேடியை பார்க்கக்கூடாது என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி எங்களிடம் வாய் மூலமாகவோ எழுத்து மூலமாகவோ கூறவில்லை. சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் ஜான்குமார் வெற்றிக்கு முக்கிய காரணம் கிரண்பேடி தான்.
தேர்தல் சமயத்தில் அரசு திட்டங்களை செயல்பட தடையாக கிரண்பேடி உள்ளார் என்று பிரசாரம் செய்தோம். அதன் பயனாக நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தலில் புதுச்சேரி காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் ஆளுநரை சந்தித்தது சரியல்ல' என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம் சாட்டியுள்ளார்
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய அரசு ஏற்பாட்டில் நடந்த வெளிநாட்டுப் பயணங்கள், அதாவது சுற்றுலா நிகழ்வுகள் எதற்கும் கிரண்பேடி சுற்றுலாத் துறை அமைச்சரான தனக்கு அனுமதி தரவில்லை என்றும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: