உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகாரைச் சேர்ந்த 20 வயதான பெண் ஒருவருக்கு கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ரக்ஷா பந்தன் கொண்டாடுவதற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்த அப்பெண், இரவு மாடியில் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது கவுசல் என்ற இளைஞர், துப்பாக்கியால் அப்பெண்ணை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடி உள்ளார். சத்தம்கேட்டு ஓடிவந்த பெற்றோர், தனது மகள் சடலமாகக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்பேரில் விரைந்த வந்த காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் காவல் துறை நடத்திய விசாரணையில், அப்பெண்ணும் பக்கத்து வீட்டு இளைஞரான கவுசல் என்பவரும் காதலித்தது தெரியவந்தது. ஆனால், அவர்களின் காதலுக்கு பெற்றோர் சமதிக்காததால், அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதனால் காதலி தன்னை ஏமாற்றிய ஆத்திரத்திலிருந்த கவுசல், பழிவாங்கும் நோக்கத்தில் வீட்டிற்கு வந்த காதலியை சுட்டுக் கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய கவுசலை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.