முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் இங்கிலாந்து நாட்டில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலும், அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய் மதிப்பிலும் சொத்து வாங்கியுள்ளதாகவும். இந்த விவரங்களை அவர்கள் தங்களது வருமான வரி கணக்கில் காட்டவில்லை என
அவர்கள் மீது கருப்புப் பணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம், விசாரித்துவந்தது.
இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்பட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, கருப்புப் பண சட்டத்தின் கீழ் வருமானவரித் துறை வழக்கு தொடர எழும்பூர் நீதிமன்றம் அளித்த அனுமதி தவறு என கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினருக்கு எதிரான கருப்பு பண சட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக வருமானவரித் துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு மீதான விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.