டெல்லியிலுள்ள தமிழர்களுக்குக் கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க, அவர்களது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வண்ணம் டெல்லி தமிழ்நாடு இல்லமான வைகையில் இன்று கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் சார்பில் மருத்துவர்கள் பங்கேற்று டெல்லியிலுள்ள தமிழ் மக்கள், அரசு அலுவலர்கள், சிறப்புக் காவலர்கள், ஊடகவியலாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
இதுபற்றி பேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மூத்த மருத்துவர் மாணிக்கவாசகம், “டெல்லியிலுள்ள தமிழர்களுக்குக் கரோனா வராமல் தடுக்கும் பொருட்டு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. கபசுரக் குடிநீர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
கபசுரக் குடிநீர் பொட்டலங்கள் வேண்டும் என்பவர்கள் டெல்லி சப்தர்ஜங் அரசு மருத்துவமனையின் முதல் தளத்திலுள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவினை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். தொலைபேசி மூலம் இதுகுறித்த தகவல் பெற விரும்புபவர்கள் இந்த எண்ணை 011-26102447 தொடர்புகொள்ளலாம்" எனக் கூறினார்.