குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. ஆர்ப்பாட்டத்தில் சில இடங்களில் போராட்டக்காரர்கள் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை சேதம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, ரயில்வே பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களைக் கண்டதும் சுட்டுத் தள்ளுங்கள் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் பல பகுதிகளில் ரயில்வேத்துறை நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இந்தத் துறையில் 13 லட்சம் பேர் இரவு, பகல் பாராது நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகின்றனர். இவ்வாறு செயல்பட்டு கொண்டு இருக்கும் துறையின் சொத்துக்களை சேதப்படுத்தினால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் சுரேஷ் அங்காடி தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிராக இணைய தளத்தில் மக்கள் எதிர்க் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு மத்திய அமைச்சர் இவ்வாறு எல்லாம் பேசக் கூடாது என மக்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைத் திரும்பப் பெறக் கோரி, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் அமைதியின்மை காரணமாக கிழக்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை 19 ரயில்களின் சேவையை ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ' மோடி ஆட்சியில் 600 இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது' - அமித் ஷா