சரவணபவன் உணவகத்தின் உரிமையாளர் ராஜகோபால். இவர் தனது உணவகத்தில் வேலை செய்து வந்தவரின் மகளான ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்ய விரும்பினார். எனவே திருமணத்திற்கு தடையாக இருந்த ஜீவஜோதியின் கணவர் ப்ரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படையை வைத்து ராஜகோபால் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் ராஜகோபால் குற்றவாளி என தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகோபால் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
இதனை எதிர்த்து ராஜகோபால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்து ஜூலை 7ஆம் தேதி ராஜகோபால் சரணடைய உத்தரவு பிறப்பித்தது. உடல்நிலையை காரணம் காட்டி சரணடைய கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு அளித்தார். ஆனால் இதனை நிராகரித்த நீதிமன்றம் ராஜகோபாலை உடனடியாக சரணடைய உத்தரவு பிறப்பித்துள்ளது.