நாட்டின் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன். இவர் மீது, கடந்த 2009ஆம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் வழக்கை நேற்று (ஜூலை.25) உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா விசாரித்தார். விசாரணை போது, வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜீவ் தவான், இவ்வழக்கு குறித்து தனது தரப்பு வாதத்தை முன்வைக்க கூடுதல் அவகாசம் கேட்டார்.
இந்த வழக்கில், இதற்கு முன்னர் மூத்த வழக்குரைஞர் ராம் ஜேத்மலானி பிரசாந்த் பூஷனுக்காக ஆஜராகி வந்த நிலையில், அவர் மறைவையடுத்து ராஜீவ் தவான் தற்போது தான் வழக்கை கையில் எடுத்துள்ளார். எனவே, ராஜீவ் தவானின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக, கோவிட் - 19 லாக்டவுனால் குடிபெயர் தொழிலாளர் சந்தித்த துயரம், பீமா கோரேகான் விவகாரத்தில் சமூக செயல்பாட்டாளர்களின் கைது உள்ளிட்டவற்றில் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து, பிரசாந்த் பூஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனங்களை முன்வைத்தார். இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி, அவர்(பிரசாந்த் பூஷன்) மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சட்டப்பேரவையை உடனே கூட்ட வேண்டும்; நீதிமன்ற உத்தரவுக்குப்பின் முதலமைச்சர் கெலாட் கோரிக்கை