சேலம் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவுக்கானப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரோகினி ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்றது. இதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முறையான ஆய்வுக்குப் பின்னர் ஆயுதமேந்திய காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்போடு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் அளித்த வாக்கை உறுதி செய்வதற்கான விவிபேட் இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரோகினி சேலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு நேரடியாக பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் ரவுடிகள் பலர் கைது செய்யப்பட்டிருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
பின்னர் வாக்கு சேகரிப்பின் போது சேலத்தில் பெண் ஒருவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரோகினி, இதுதொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்றும், இதுதொடர்பாக ஊடகங்களில் வந்த தகவலை தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.