புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மற்றும் பேரிடர் காலத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் என்.ஆர். காங்கிரஸ் சிரம் தாழ்ந்து வணங்கி வாழ்த்தி பாராட்டுகிறது.
இந்த அரசானது தற்போதைய சூழலில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய சிறப்பு நிதிகள் வழங்க வேண்டும். மருத்துவமனையில் உயிர் காக்கும் சுவாசக் கருவிகள், வென்ட்டிலேட்டர்கள் குறைந்த கையிருப்பு உள்ளது என்று மருத்துவக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது போதுமா என்பதை உணர்ந்து அரசு உபகரணங்கள் மற்றும் வென்ட்டிலேட்டர்களை துரிதமாக வாங்கவேண்டும். மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் பாதுகாப்பான கவச உறைகள் இல்லை.
கரோனா வைரஸை தடுக்கும் ஜி-95 முகக்கவசங்கள், கவச உடைகளை எந்தவிதமான நிபந்தனையின்றி உடனடியாக அரசு வாங்க வேண்டும். அதுமட்டுமல்லாது புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கரோனா சிறப்பு வார்டுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் போதுமான வசதிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும். இயற்கை பேரிடர் காலம் ஏற்படும்போதும், உயிர் காக்கும் கருவி வாங்கும்போதும் அரசு பழைய நடைமுறையை பின்பற்றினால், காலதாமதம் ஆகும். இது ஆட்சியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும், அரசுப் பதவியில் உள்ளவர்களுக்கும் மிகவும் நன்றாக தெரியும்.
எனவே, இதனைப் பற்றி முடிவெடுக்க துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் கூடி ஆலோசித்து உடனடியாக தீர்வு காண வேண்டும். ஊரடங்கு அறிவித்த காலங்களிலிருந்து குடும்பத்தை விட்டுவிட்டு பணிபுரியும் காவல் துறையினர் அனைவருக்கும் தேர்தல் காலத்தில் வழங்குவது போன்ற சிறப்பு நிதி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
புதுச்சேரி அரசின் அனைத்து தன்னாட்சி, அரசு சார்பு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ, பான்பேப், நெசவு தொழிலாளர்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் கிடைக்காத அவல நிலையில் உள்ளனர். அவர்கள் வாழ்க்கை தரத்தில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு உரிய முறையில் சம்பளம் வழங்க வேண்டும். இந்த கருணைத் தொகையை பிறகு பேசித் தீர்த்துக்கொள்ளலாம்.
இந்தக் கொடிய கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா சோதனைகளை அதிகரிக்க வேண்டும் - ராமதாஸ்