புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களில் முக்கியமானது மும்மொழி கொள்கை. இதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், அதை மீறி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
1986இன் கல்விக் கொள்கைக்கு மாற்றாக "புதிய கல்விக் கொள்கை 2020" அமல்படுத்தப்படுகிறது. இதற்கு கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்தப்படுவது குறித்து மறுஆய்வு செய்வதற்காக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உயர் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கல்வி நிறுவனங்களிடையே புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவத்தவதற்கு டாஸ்க் ஃபோர்ஸ் ஒன்றை ஆரம்பிக்க கல்வி அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
அந்தக் குழுவினர், உயர் கல்வி மற்றும் பள்ளி கல்வித் துறைகளுக்கு இடையில் புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இதை அமல்படுத்த கிட்டத்தட்ட 181 பணிகள் நிறைவேற்றப்படவுள்ளதால், அவற்றை கண்காணிக்கவும் டாஸ்க் போர்ஸூக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளனர்.