கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதற்கிடையே, கரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்ட ராஜஸ்தான் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கைலாஷ் சந்திரா உயிரிழந்துள்ளார்.
முன்னதாக, கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கரோனாவிலிருந்து குணமடைந்த போதிலும் மூச்சுத்திணறல் காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி, அவரின் நிலைமை மோசம் அடைந்ததை தொடர்ந்து, ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மூன்று முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கைலாஷ் சந்திராவுக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.