நாடாளுமன்றத்தில் பண்ணை மசோதா, விவசாயிகள் உற்பத்தி, வணிகம் மற்றும் வர்த்தக மசோதா ஆகியவை மீதான விவாதம் நேற்று (செப். 17) நடந்தது. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாஜ்வாதி, திமுக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவர் சுக்பீர் சிங் பாதல், " கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாபில் விவசாயத்துறை வளர்ச்சிக்காக வழங்கிய உழைப்பை இந்த இரு மசோதாக்கள் மூலம் மத்திய அரசு களங்கப்படுத்தி விட்டது. எங்கள் கட்சி பஞ்சாபில் விவசாயிகளுக்காகவே இருக்கும் கட்சி" என்று தெரிவித்தார். மேலும், இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடக்கும்போது அதற்கு எதிராக வாக்களிப்போம் எனக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சராக இருக்கும் சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல், அரசின் விவசாய விரோத போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்த தகவலை அமைச்சரின் கணவரும், சிரோமணி அகாலி தளம் கட்சித் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரிந்தர் சிங், “ மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளார் ஹர்சிம்ரத் கெளர் பாதல், ஆனால் தற்போது பாஜகவுடன் தானே சிரோமணி அகாலி தளம் கூட்டணியில் இருக்கிறது. அமைச்சரின் இந்த முடிவு விவசாயிகள் மீதான அக்கறையினால் இல்லை, மாறாக அவர்களின் சொந்த செல்வாக்கை காப்பாற்ற இந்த முடிவை எடுத்துள்ளனர். இருந்தபோதிலும், இது மிகவும் தாமதமான, சிறிய முடிவு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை அந்த இரு விவசாய மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...மோடி அமைச்சரவையிலிருந்து விலகிய பெண் அமைச்சர்: காரணம் என்ன?