புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டையும், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு மஞ்சள் நிற குடும்ப அட்டையும் என இரண்டு விதமான குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளது. தற்போது ஊரடங்கு காரணமாக வறுமைக்கோட்டிற்குக் கீழ், உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் உத்தரவின்படி, தலா 5 கிலோ இலவச அரிசி புதுச்சேரி மாநிலத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே ஊரடங்கு காரணமாக வறுமைக்கோட்டிற்கு மேல் வாழும் மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களும் வேலை இல்லாத காரணத்தால், மாநில அரசு இலவச அரிசியை வழங்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு, 3 மாதத்திற்கு 30 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கும் அரசு அறிவித்த இலவச அரிசியை உடனடியாக வழங்கக்கோரி, காரைக்கால் மாவட்ட பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
முன்னதாக, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைபிடித்த 30-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவர்களைத் தடுத்து நிறுத்தினார். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகள் 5 பேர் ஆட்சியரிடம் சென்று, மண்சட்டியில் கொண்டு வந்த மனுவை அளித்தனர்.
மேலும் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்த 30 கிலோ இலவச அரிசியை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: பொருளாதார மீட்டெடுப்பு திட்டம் தேவை - ராகுலுக்கு ஐடியா சொன்ன அபிஜித் பானர்ஜி