நாட்டை முதன்மையாக கருதும் வகையில் உறுதிமொழி ஏற்க மக்களுக்கு கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட மோடி, "நாம் எடுக்கும் முடிவுகள் நாட்டை வலிமையாக கட்டமைக்க வேண்டும்.
நாட்டின் நலனை முதன்மையாக கருதவேண்டும். 2047ஆம் ஆண்டு, நூறாவது சுதந்திர தின விழாவின் போது நாட்டை எப்படி பார்க்க விரும்புகிறோமோ அதற்கு ஏற்றார்போல் அடுத்த 26 ஆண்டுகளுக்கு நம்முடைய முயற்சிகள் அமைய வேண்டும்.
மற்ற நலனைவிட நாட்டு நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும், நம்முடைய பிரச்னையை காட்டிலும் நாட்டின் பிரச்னையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், மற்றவற்றை ஒப்பிடுகையில் நாட்டின் ஒற்றுமையில் அதிக கவனம் செலுத்த வேண்டும், அரசியலமைப்பை நிறைவேற்றுவதை நாம் நோக்கமாக கொள்ள வேண்டும் ஆகிய உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்.
மாற்று கருத்துகள், மாற்று பார்வை ஆகியவையே ஜனநாயகத்தை துடிப்பாக்கும். கொள்கை, அரசியல் ஆகியவற்றில் மாற்று கருத்துகள் இருக்கலாம். ஆனால், மக்களுக்கு சேவை செய்வதில் மாற்று கருத்தை வைத்திருக்கக் கூடாது. அதுவே நம்மின் நோக்கமாக இருக்க வேண்டும்" என்றார்.