பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது, பெருந்தொற்று காலத்திலும் தொழில்முனைவோருக்கு வாய்ப்பு பெருகியுள்ளதாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "பெருந்தொற்று காரணமாக எரிசக்தி துறையில் உலகம் முழுவதும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், இத்துறையில் நீங்கள் காலடி எடுத்து வைக்கிறீர்கள்.
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரின் வளர்ச்சிக்கு இக்காலக்கட்டத்தில் வாய்ப்பு பெருகியுள்ளன. உங்களின் திறன்களாலும் தொழில்முறையாலும் இச்சூழலிலிருந்து மீண்டெழுந்து ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு ஊக்கம் அளிப்பீர்கள் என நம்பிக்கை உள்ளது.
கார்பன் வாயு வெளிப்பாட்டை 30 முதல் 35 விழுக்காடு வரை குறைக்கும் நோக்கிலான லட்சியத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அடுத்த பத்தாண்டுகளில், இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டை நான்கு மடங்கு அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இம்மாதிரியான கடினமான சூழலில், பட்டதாரியாவது எளிதான செயல் அல்ல.
ஆனால், இச்சவால்களை விட உங்கள் திறமையின் வலிமை அதிகம். வெற்றிப்பெற்றவர்கள் சவால்களை சந்திக்காமல் இருந்ததில்லை. சவால்களை ஏற்று எதிர்கொண்டு அதனை தீர்த்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்" என்றார்.
இந்நிகழ்வின்போது, 45 மெகா வாட் சூரிய மின் உற்பத்திக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இந்தப் பட்டமளிப்பு விழாவில், 2600 மாணவர்களுக்கு பட்டம்/ பட்டய படிப்பு சான்றிதழ் அளிக்கப்பட்டது.