கடந்த 1992ஆம் ஆண்டு முதல் இந்தியா - அமெரிக்கா கடற்படைகளின் இருதரப்பு கூட்டு பயிற்சியாக மலபார் பயிற்சி நடைபெற்றுவருகிறது. இந்த கூட்டுப் பயிற்சியில் 2015ஆம் ஆண்டில் ஜப்பான் நாடு இணைந்தது.
23 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த கூட்டு கடற்சார் பாதுகாப்பு பயிற்சியில் இந்தாண்டு (24ஆவது ஆண்டு) ஆஸ்திரேலியாவும் இணைந்தது.
கடற்பரப்பின் பாதுகாப்பை அதிகரிக்க ஆஸ்திரேலியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை இந்தியா விரும்புவதால், இந்தாண்டு மலபார் கூட்டு பயிற்சியில் ஆஸ்திரேலிய கடற்படையும் இணைக்கப்பட்டது.
வங்கக்கடலில் நடந்துமுடிந்த மலபார் 2020 முதல்கட்ட கூட்டுப் பயிற்சியில் பங்குபெற்றது.
இந்நிலையில், 'மலபார் 2020' இரண்டாம் கட்ட பயிற்சி வடக்கு அரபுக் கடலில் 2020 நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டாம் கட்ட பயிற்சியில், இந்திய கடற்படையின் விக்ரமாதித்ய கேரியர் போர் குழு மற்றும் அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் கேரியர் ஸ்ட்ரைக்கும் இணைந்து ஈடுபடவுள்ளது.
இந்த இரண்டு கப்பல்களுடன் நீர்மூழ்கிக் கப்பல், கடற்படைகளின் விமானங்கள் ஆகியவையும் இணைந்து தீவிர கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோ - பசிபிக் கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும், பயிற்சியில் பங்குபெறும் நாடுகள் இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும் இந்த கூட்டுப் பயிற்சி நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.