டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி அரசால் 2015ஆம் ஆண்டில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக மொஹல்லா கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இதனால் வீடுகளிலிருந்து வெகுதூரம் பயணிக்காமல் நோயாளிகளால் சிகிச்சைப் பெற முடிந்தது.
அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல மக்கள் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது அல்லது அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்தக் குறைகளை மொஹல்லா கிளினிக்குகள் போக்கியிருக்கின்றன.
டெல்லி ஆயிரத்து 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 500 சதுர கிலோமீட்டர் வனப்பகுதிகள். மீதமுள்ள ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில்தான் மக்கள் இருக்கின்றனர். ஒரு சதுர கிலோமீட்டருக்குள் ஒரு மொஹல்லா கிளினிக் திறக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். மேலும் நூற்றுக்கணக்கான மொஹல்லா கிளினிக்குகள் அடுத்த மாதம் திறக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.