கடந்த 2008ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், 10 பேர் கொல்லப்பட்டனர். 82 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக பிரக்யா சிங் தாகூர் உள்ளார். தொடர்ந்து சர்ச்சை கருத்தை வெளியிட்டுவரும் இவர், தற்போது ராகுல் காந்தி குறித்து கேலி செய்யும் விதமாக கருத்து ஒன்று தெரிவித்துள்ளார்.
அதில், பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ராகுலை எந்தப் பெண்ணும் திருமணம் செய்ய விரும்பவில்லை எனவும் குழந்தைகள் கூட அவரை கேலி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரமும் விவசாயிகளும் வலுவாக இருந்திருந்தால் இந்தியா எல்லைக்குள் நுழைய சீன ராணுவத்திற்கும் துணிச்சல் இருந்திருக்காது என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய பிராக்யா சிங் தாகூர், ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் முன்வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், "அனைவரும் பிரதமராக விரும்புகின்றனர். ஆனால், அதற்கான தகுதி வேண்டும். விவசாயிகள், ராணுவ வீரர்கள் என அவரவர்களுக்கென தனி பங்குகள் உள்ளன. ஆனால், சில துரோகிகள் ராணுவ வீரர்களே தேவை இல்லை எனக் கூறுகின்றனர்.
உணர்வு, அறிவு, கலாசாரமற்ற, மதவெறி உடைய நபர்கள் இம்மாதிரியான கருத்து தெரிவித்துவருகின்றனர். இது போன்ற நபரை திருமணம் செய்து கொள்ள விரும்புவீர்களா என ஒரு நிகழ்ச்சியில் கேள்வி கேட்கப்பட்டது. அவர்களோ அந்த நபரை கேலி செய்கின்றனர். அந்த நபரும், அவரின் தாயாரும் இத்தாலியில் உட்கார்ந்து கொண்டு பிரதமராக வேண்டும் எனக் கனவு காண்கின்றனர்" என்றார்.