நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை தகவல் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக மேற்குவங்கம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த ஒருவரை என்ஐஏ அலுவலர்கள் நேற்று கைதுசெய்தனர்.
இது குறித்து என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில், "முர்சிதாபாத் மாவட்டம் ராணிநகர் காவல் நிலையத்திற்குள்பட்ட நஸ்ரானா கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான அப்துல் மோமின் மோன்டல் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்டார். உலகை அச்சுறுத்தும் பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசவிரோத மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி, இதுகுறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்ட அப்துல் மோமின் மோன்டல் முர்ஷிதாபாத்தில் உள்ள மதராசாவில் ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சதித் திட்டத்தைத் தீட்டும் நோக்கில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் இவர் கலந்துகொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயங்கரவாத அமைப்பில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இவர் முயற்சித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த அமைப்புக்காக இவர் நிதி திரட்டியது தெரியவந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவரின் வீட்டில் சோதனை செய்ததில் பல முக்கிய டிஜிட்டல் கருவிகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.